Tuesday, March 1, 2011

தமிழக மீனவர்களின் சமூக பொருளாதார உண்மை நிலை

தமிழக மீனவர்களின் சமூக பொருளாதார உண்மை நிலை என்ன என்பதை பற்றி இங்கு இருக்கும் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் அக்கறை என்பது துளி கூட இல்லை என்பது தான் உண்மை. (நடிகர் நடிகர் விஜய் பற்றி கடைசியாக பேசுவோம்).

அதிமுக ஆட்சியாக இருந்தாலும், திமுக ஆட்சியாக இருந்தாலும் மீனவனைப் பொறுத்தவரை இரண்டும் ஒன்றுதான். ஏனென்றால் அவர்களுக்கு மீனவனைப் பற்றிய நினைப்பே சிங்களவன் அவர்களில் ஒருவனை கொன்றாலோ அல்லது அவர்களில் பலரை அடித்துக் காயப்படுத்தினாலோ, அல்லது அவர்களை சிறைபிடித்தாலோ தான் வரும். பிறகு ஒரு சில தினங்களில் அவனை மறந்து விடுவார்கள்.

ஆனால் மீனவர்களின் உண்மையான நிலை என்ன தெரியுமா? மீனவர்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடியினரை விடக் கீழான நிலையில் தான் இருக்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அது தான் உண்மை. கீழே உள்ளவற்றை படியுங்கள் உங்களுக்கே தெரியும்.

1. தமிழக மீனவர்களில் எத்தனை பேர் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். போன்ற உயர் பதவிகளில் உள்ளார்கள் தெரியுமா?
பூஜ்யம் யாராவது அப்படி இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள்.

2. தமிழக மீனவர்களில் எத்தனை பேர் மருத்துவர்களாக இருக்கிறார்கள் தெரியுமா?
பத்து அல்லது இருபது. அதற்கு மேல் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

3. தமிழக மீனவர்களில் எத்தனை பேர் பொறியியல் வல்லுனர்களாக இருக்கிறார்கள் தெரியுமா?
தெருவுக்கு 10 பேர் 20 பேர் இருந்தாலும், மீனவர்களைப் பொறுத்தவரை தமிழகம் முழுவதும் சேர்த்து நூறு அல்லது இருநூறு பேருக்கும் கீழ் தான். அதற்கு மேல் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

4. தமிழக மீன்வர்களில் எத்தனன பேர் அரசு வேலையில் உள்ளார்கள் தெரியுமா?
நூறு அல்லது இருநூறுக்கும் கீழ் தான். இது கட்டாயம் அரசாங்கத்திற்கு தெரிந்திருக்க வேண்டும். அறிவிக்க அவர்கள் தயாரா?

5. தமிழக மீன்வர்களில் எத்தனை பேர் மந்திரியாக, எம்.எல்.ஏ.வாக அல்லது எம்.பி யாக இருக்கிறார்கள்?
எம்.ஜி.ஆர் காலத்தில் திரு.கலைமணி என்பவர் மந்திரியாக இருந்தார். பிறகு கலைஞரின் திமுக ஆட்சியில் திரு.மதிவாணன் அவர்கள் எம்.எல்.ஏ.வாக இருந்தார். அடுத்து ஜெயலலிதாவின் ஆட்சியில் திரு.டி.ஜெயக்குமார் மந்திரியாக இருந்தார். இப்பொழுது மீண்டும் திமுக ஆட்சியில் திரு.சாமி அவர்கள் மந்திரியாக இருக்கிறார்.

ஒவ்வொரு முறையும் ஒருவர் அல்லது இருவர் தான் மீனவ சமூகத்தில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களில் ஒருவருக்கு கடனே என்று மந்திரி பதவி கொடுப்பார்கள். பெரும்பாலும் மீன்வளத் துறைதான். இதற்கு விதிவிலக்கு ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம் பெற்ற திரு.டி.ஜெயக்குமார் (கடந்த ஆட்சியில் அவர் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தார்). ஒரு வேளை மீனவனுக்கு வேறு ஒன்றும் தெரியாது என்று அவர்களே முடிவு செய்து விட்டார்களோ என்னவோ.

இதற்கெல்லாம் முக்கிய காரணம் மீனவர்களிடையே விழிப்புணர்வு இன்மை தான். அவர்களுக்கு என்று போராடவோ, அல்லது அவர்களின் உரிமையை அரசுத்துறையினரிடமும் அரசியல்வாதிகளிடமும் எடுத்துச் சொல்லி பெறவோ, சொல்லிக் கொள்ளும்படியான தலைவர்கள் இல்லை. இதனை ஆளுவோர்கள் தங்களுக்குச் சாதகமான அம்சமாக எடுத்துக் கொண்டு அவர்களை தலைமுறை தலைமுறையாக அதே நிலையிலேயே வைத்துள்ளனர்.

திமுகவாக இருந்தாலும் அதிமுகவாக இருந்தாலும் மீனவனுக்காக என்ன செய்தீர்கள் என்று கேட்டால், அவனுக்கு வலை வாங்கிக் கொடுத்தோம், படகு வாங்கிக் கொடுத்தோம், என்று தான் சொல்கிறார்களே தவிர, அவர்களின் குழந்தைகளின் கல்வி முன்னேற்றதிற்கோ, அவர்களின் சமூக முன்னேற்றத்திற்கோ எந்த ஒரு திட்டத்தையும் அவர்கள் தீட்டியதாக சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

பாமகவின் போராட்டத்திற்கு பிறகு வன்னியர்களுக்காக மிகவும் பின் தங்கிய வகுப்பை ஏற்படுத்திய போது அதில் மனசு வந்து மீனவர்களையும் சேர்த்தது ஒன்று தான் அவர்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளில் செய்த மிகப் பெரிய சாதனை. அது கூட நெல்லுக்கு பாய்ந்த நீர் கொஞ்சம் புல்லுக்கும் பாய்ந்தது போலத்தானே ஒழிய வேறொன்றும் இல்லை. அதைக் கூட பொறுக்காத பாமக மீனவர்களைச் சேர்ப்பதைக் கூட அப்போது எதிர்த்தது, பின்னர், அவர்களைச் சேர்ப்பதனால் ஒன்றும் குடிமுழுகிவிடாது, அவர்களால் வன்னியர்களுடன் போட்டியிட முடியாது என்று உணர்ந்ததாலோ என்னவோ, அவர்களும் மிகவும் பிற்பட்டவர் பட்டியலில் இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டார்கள்.

தாழ்த்தப்பட்ட பழங்குடியினரில் கூட மேலே சொன்னக் கணக்கை விட அதிக எண்ணிக்கையில் தான் படித்தவர்களும், பதவியில் உள்ளவர்களும் இருக்கிறார்கள். இதை மறுக்க எந்த அரசாலும் முடியாது, ஏனென்றால் அது தான் உண்மை.

இப்பொழுது அரசுத்துறையினருக்கும், அரசியல்வாதிகளுக்கும், மற்றும் இப்பதிவை படிக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். மேலே சொன்ன புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஒன்று அதனை ஏற்றுக் கொண்டோ அல்லது அதற்கு மாறுபட்டோ உங்களால் பதில் சொல்ல முடியுமா? மேலே சொன்னவை அனைத்தும் உண்மையாகும் பட்சத்தில் மீனவர்களுக்கு அவர்களின் உண்மை நிலையினை கருத்தில் கொண்டு அவர்களை தாழ்த்தப்பட்ட பழங்குடியினராக அறிவிக்க தயாரா? (பல மாநிலங்களில் மீனவர்கள் பழங்குடிகளாகத்தான் உள்ளனர்.) அப்படி அறிவிக்க முடியாது என்றால் அதற்கான காரணத்தை, அதாவது மீனவன் இந்த இந்த வகையில் முன்னேறி விட்டான் என்பதையாவது தெரிவிக்க தயாரா? என்னுடைய இந்த சவாலை ஏற்க எந்த கட்சி தயாராக உள்ளது?

சரி கடைசியாக இப்போது நடிகர் விஜய் பற்றி பேசுவோம். தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளைக் கூட நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நடிகர்கள் அடிக்கும் இத்தகைய ஸ்டண்டுகளை எல்லாம் இந்தக் காதில் கேட்டு அந்தக் காதில் விட்டு விடவேண்டும். இதற்கெல்லாம் பதிவெழுதி உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்கக் கூடாது.