Monday, February 21, 2011

லஞ்ச நீதி - 2. மின்வாரியம்

லஞ்சம் என்ற வார்த்தையைச் சொன்னாலே நினைவுக்கு வரும் பல துறைகள் இருக்க, எடுத்தவுடன் மின்சார வாரியம் என்று கூறுகிறேனே என்று யோசிக்காதீர்கள். என்னைப் பொருத்தவரை லஞ்சம் எவ்வளவு வாங்கப்படுகிறது என்பது எப்படி முக்கியமோ அப்படித்தான் எந்த வழியில் வாங்கப்படுகிறது என்பதும்.

நாம் லஞ்சம் தான் கொடுக்கிறோம் என்பது தெரியாமலே நம்மில் 99% சதவிகிதம் பேர் மின்சார வாரியத்தில் வேலை செய்பவருக்கு லஞ்சம் கொடுத்து வருகிறோம் தெரியுமா? மீதி 1% எப்படி தப்பித்தார்கள் என்பதை கடைசியில் விளக்குகிறேன்.

முதலில் மின் வாரியத்தில் நாம் எப்படி நம்மையறியாமல் லஞ்சம் கொடுக்கிறோம் என்று பார்ப்போம். ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சார கணகீட்டு அளவைக் குறிக்க ஒரு அட்டை கொடுப்பார்கள். எனக்கு நினைவு தெரிந்த நாளாக (சுமார் 20 - 25 வருடமாக) அந்த அட்டையின் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தான் இருக்கிறது. அதில் ஒரு வருடத்திற்கான அளவுகளை குறிக்க ஏதுவாக 12 வரிகள் மட்டுமே இருக்கும். இது ஏறக்குறைய இரு அஞ்சல் அட்டை அளவு தான் இருக்குமென்பதால் இதை அச்சடிக்க 2 ரூபாயோ அல்லது 3 ரூபாயோ ஆகக் கூடும். (அது எவ்வளவு ஆனால் என்ன?) ஆனால் இதை மின்சார வாரியம் இலவசமாக அச்சிட்டுக் கொடுக்கிறது. (அப்படித்தான் சொல்கிறார்கள்.) ஆனால் நான் முன்பே சொன்னது போல் எனக்கு நினைவு தெரிந்த நாளாக ஒவ்வொரு வருடமும் புதிய அட்டை போடுவதற்கு கணக்கு எடுக்க வருபவரிடம் காசு (அப்போது ரூ.2 - இப்போது ரூ.5) கொடுத்தால் தான் புதிய அட்டை கொடுப்பார். இல்லையென்றால் பழைய அட்டையில் மூலை முடுக்கெல்லாம் எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விடுவார். இந்த மாத கணக்கை எங்கே எழுதியிருக்கிறார் என்று நாம் கண்டு பிடிப்பதற்குள் மண்டை தீய்ந்து விடும். இதற்கு பயந்து கொண்டே அனைவரும் காசு போனால் போகிறது என்று கொடுத்து புது அட்டை வாங்கி விடுவார்கள். இதுதான் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இதனால் ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் கணக்கெடுக்கும் கணக்காளருக்கு ஏறக்குறைய ரூ.5000 வரை (அதாவது 1000 வீடுகளில் ரூ.5) கிடைக்கும். இந்த லஞ்சம் (அப்படிச் சொல்லக் கூடாது - அது கார்டு அளிக்க சேவைக் கட்டணம்) தமிழகம் முழுவதும் பெறப்படுகிறது. ஆனால் நாமும் இதை லஞ்சமாக நினைப்பதே இல்லை என்பது தான் உண்மை. இப்படி காலங்காலமாக நாமும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம், அவர்களும் வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அரசாங்கம் இலவசமாக கொடுக்கச் சொல்லி கொடுப்பதை இவர்கள் காசாக்கிக் கொள்கிறார்கள்.

இதனை நிறுத்த வழியே இல்லையா என்றால், இருக்கிறது. அஞ்சல் அட்டையை அரசாங்கம் 50 பைசா என்று விலைக்கு விற்பது போல் இந்த கார்டுக்கும் விலை நிர்ணயம் செய்து விற்கலாமே. அப்போது எல்லோரும் ஒழுங்காக அந்த விலை கொடுத்து வாங்குவார்கள் அல்லவா? எங்கு இலவசம் கொடுக்கப்படுகிறதோ அங்கு லஞ்சம் ஆரம்பமாகிறது என்பது இதன் மூலம் தெரிகிறதல்லவா. அரசாங்கம் அந்த கார்டின் விலையை ரூ.1 என்றோ அல்லது ரூ.2 என்றோ விலை நிர்ணயம் செய்தால் உண்மையில் நமக்கு லாபம் தானே ஒழிய நஷ்டம் இல்லை. ஏனென்றால் ரூ.5 லஞ்சமாக கொடுப்பதை விட ரூ. 2 கொடுத்து நாம் உரிமையோடு வாங்கலாமே.

உண்மையில் நாம் ரூ.5 வரை லஞ்சம் கொடுத்து கார்டு கேட்டாலும் அவர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் கொடுக்க மாட்டார்கள். ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் பழைய அட்டையில் எல்லாப் பக்கத்திலும் கிறுக்குவார்கள். அப்போதுதானே நாம் லஞ்சம் கொடுத்தாலும் பரவாயில்லை என்று நினைப்போம். இப்படி நாம் காசையும் கொடுத்து அவர்களிடம் கார்டுக்கும் மன்றாட வேண்டும். இலவசம் எப்படி லஞ்சத்தை வளர்ப்பதோடு அதிகார துஷ்பிரயோகத்திற்கும், அரசுத்துறையினரின் அராஜக போக்கிற்கும் வழி வகுக்கிறது பார்த்தீர்களா?

ஆனால் இந்த லஞ்சத்தை ஒழிக்கும் எண்ணம் ஏனோ மின்துறை அமைச்சருக்கும் அத்துறை உயர் அதிகாரிகளுக்கும் இது வரை எழவில்லை. ஒருவேளை அவர்கள் விரும்பினாலும் அத்துறையில் பலம் பொருந்தியதாக இருக்கும் தொழிற்சங்கங்கள் இதை எதிர்க்கின்றனவோ என்னவோ? (ஊழியர் நலம் விரும்பிகள் அல்லவா அவர்கள்)

அப்புறம் முதலில் சொன்ன விஷயத்திற்கு வருவோம். அதாவது மீதம் உள்ள 1% சதவிகிதம் பேர் எப்படி காசு கொடுக்காமல் அட்டை பெறுகிறார்கள் என்று. அது ஒன்றும் பெரிய விசயமில்லை. அதற்கு நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவரோ, நண்பரோ, உறவினரோ மின் வாரியத்தில் வேலை செய்தால் போதும்.

Monday, February 14, 2011

லஞ்ச நீதி - 1. அவசர கால லஞ்சம்

லஞ்ச நீதி - 1. அவசர கால லஞ்சம்

நாட்டில் ஒரே ஒரு விசயம் ஏறக்குறைய பெரும்பான்மை மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் அது லஞ்சம் ஒன்று தான். என்னடா இப்படி சொல்கிறேனே என்று எண்ணாதீர்கள். இன்றைக்கு லட்சம் கோடிகளில் லஞ்சம் வாங்கிய நிகழ்வுகளைப் பற்றிப் படிக்கும் போது அதை எதிர்த்து எரிமலையாய் வெடிப்பவர்கள் கூட தங்களின் வாழ்வில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தாங்கள் விரும்பியோ விரும்பாமலோ லஞ்சம் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு கண்டிப்பாக ஆளாகியிருப்பார்கள்.

நீங்கள் கேட்கலாம் லஞ்சம் கொடுப்பது வேறு வாங்குவது வேறு என்று. உண்மைதான். ஆனால் கொடுப்பவர் இருப்பதால் தானே லஞ்சம் வாங்கப்படுகிறது. நீங்கள் தரமாட்டேன் என்று சொன்னால் அவரால் எப்படி வாங்கமுடியும். ஆனால் தரமாட்டேன் என்று சொல்லுவது பல நேரங்களில் மிகவும் எளிதாகத் தோன்றினாலும் எல்லா நேரங்களிலும் எல்லோராலும், அப்படி வெறுமனே லஞ்சம் கொடுக்காமல் தங்களின் செயல்களை செய்ய முடியாது.

இது ஒரு வகையில் பார்க்கப் போனால் வள்ளுவரின் 'பொய்மையும் வாய்மை இடத்து' போன்றது தான். எப்படி என்றால் ஒருவன் விபத்தில் அடிபட்டு உயிருக்குப் போராடும் நிலையில் அரசு மருத்துவமனையில் தகுந்த சிகிச்சை அளிக்க லஞ்சம் கேட்கப்படும் போதோ, அல்லது ஒருவனுக்கு அவசரமாக ரத்தம் கொடுக்க செல்லும் போது போக்குவரத்து விதிகளை மீறியதற்கு பிரதிபலனாக காவலரால் லஞ்சம் கேட்கப்படும் போதோ, நீங்கள் கொடுக்கமாட்டேன் என்று கூறினால் ஏற்படும் கால விரயம் ஒருவரின் உயிரையே போக்கிவிடக்கூடும் என்பதால் அந்த நேரங்களில் நீங்கள் லஞ்சம் கொடுப்பதின் மூலம் ஒரு உயிர் காப்பாற்றப்படும் என்பதால், லஞ்சம் கொடுப்பதில் தவறேதும் இருக்க முடியாது. இந்த இடத்தில் இது 'பொய்மையும் வாய்மை இடத்து' என்பதற்கு சமானமாகக் கொள்ளலாம்.

ஆனால் அதே நேரம் வாழ்வில் வசதிகள் மிகக் கொண்டவர்கள் தங்களின் தவறுகளை மறைப்பதற்கோ, அல்லது தங்களுக்கு நேர்வழியில் கிடைக்கக் கூடாத சலுகைகளைப் பெறுவதற்கோ கொடுக்கப்படும் லஞ்சமானது கண்டிப்பாக குற்றமே யாகும். அது ஐந்து ரூபாயாக இருந்தாலும் சரி, ஐம்பது லட்சம் கோடியாக இருந்தாலும் சரி.

தாங்கள் லஞ்சம் கொடுப்பதற்கோ, வாங்குவதற்கோ ஒவ்வொருவரும் மேற்படி சாக்கு போக்குகளை கண்டிப்பாக வைத்துள்ளார்கள் என்பது என்னவோ நூற்றுக்கு நூறு சரிதான். சில சமயம் அவர்கள் சொல்லும் காரணங்கள் நம்மை பதில் பேச முடியாமல் கூட செய்துவிடும். ஆனால் இதனாலெல்லாம் லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் சரியென்று ஆகிவிடாது.

லஞ்ச கொடுப்பது தவறு, ஆனால் அதே சமயத்தில் அவசர அவசியம் ஏற்பட்டால் லஞ்சம் கொடுத்தாலும் தவறில்லை, என்று இரு முரண்பட்ட கருத்துக்களை கூறுகிறீர்களே என்று நீங்கள் வினவலாம். பார்வைக்கு முரண் போல் தோன்றினாலும், இது தான் நடைமுறை உண்மை. லஞ்சம் கொடுப்பது தவறு என்று அடித்துக் கூறுபவர் கூட அவசர காலங்களில் லஞ்சம் கொடுக்க நேரிடுகிறது.

இங்கே ஒரு உண்மையை கட்டாயம் தெரிவிக்க வேண்டும். லஞ்சம் கொடுப்பது தவறு என்று உண்மையாக நினைப்பவர்கள், அவசர காலங்களில் லஞ்சம் கொடுக்க நேர்ந்தாலும், எந்த சமயத்திலும் லஞ்சம் வாங்குவதில்லை என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறார்கள். என்ன இவர்களின் எண்ணிக்கை இவர்களின் கருத்துக்கு நேர்மாறான கொள்கையுடையவர்களின் எண்ணிக்கையை விட மிகவும் குறைவு என்பது தான் நிதர்சனம்.

சரி இப்படியே அவசர காலங்களில் மட்டுமே ஒவ்வொருவரும் லஞ்சம் கொடுக்க முனைந்தால் கூட, லஞ்சத்தை ஒழிக்கவே முடியாதே என்று நீங்கள் நினைக்கலாம். ஆமாம் என்ன செய்வது, முற்றிலும் புரையோடிய இந்த நோயை ஒரு நாளிலோ, ஒரு நடவடிக்கையினாலோ, அல்லது ஒரே சட்டத்தின் மூலமோ நீக்கிவிட முடியாதல்லவா. படிப்படியாகத்தானே ஒழிக்க வேண்டும்.

இனி வரும் பகுதிகளில் சாமான்ய மக்கள் எதிர்கொள்ளும் லஞ்ச அனுபவங்களையும், அவற்றை தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும், அத்தகைய லஞ்ச நிகழ்வுகள் நிகழாமல் தடுக்க எடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விரிவாகக் காண்போம்.

Thursday, February 10, 2011

தேர்தல் வாக்குறுதிகள் - 1: பெட்ரோலுக்கு தமிழக அரசின் வரி ரத்து

அடுத்து வர உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் அளிப்பது சம்பந்தமாக எனது முந்தைய பதில் சில (நகைச்சுவையான) ஆலோசனைகளை கூறியிருந்தேன்.

உண்மையிலேயே அரசியல் கட்சிகளுக்கு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால் அவர்களுக்கு உதவும் நோக்கில் நாமும் சற்று தீவிரத்துடன் ஆலோசனை கூறினால் என்ன என்று தோன்றியது. அதன் முதல் படியாக இந்த பதிவை எழுதுகிறேன். இனிமேலும் தொடர்ந்து இது போன்ற எண்ணங்கள் தோன்றினால் எழுதுவதற்கு வசதியாக இதன் தலைப்பிற்கு ஒன்று என எண்ணமிட்டுள்ளேன். இனி வாக்குறுதி குறித்து காண்போம்.

இன்று அனைத்து பொருள்களின் இமாலய விலைவாசி உயர்வுக்கும் காரணம் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வு தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆகவே அரசியல் கட்சிகளுக்கும் இது தெரிந்திருக்கும் என நம்புவோம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை பெட்ரோல் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் தமிழக அரசின் 30% சதவிகித வரி. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19 அதிகமாகிறது.

உண்மையிலேயே தமிழக மக்களின் மனங்களை கவர விரும்பும் அரசியல் கட்சி தைரியமாக தங்கள் தேர்தல் அறிக்கையில் இந்த வரியை முற்றிலுமாகவோ அல்லது பாதி அளவாகவோ குறைப்பதாகவும், இதன் மூலம் ரூ.10 முதல் ரூ.20 வரை பெட்ரோல் விலை தமிழகத்தில் மட்டும் குறையும் எனவும் அறிவிக்கலாம். இது இலவச அறிவிப்புகளை விட மக்களின் மனங்களை கட்டாயம் கவரும் என்பதில் ஐயமில்லை.

Wednesday, February 9, 2011

வாக்காளர்களுக்கு எதை இலவசமாக கொடுப்பதாக தேர்தல் அறிக்கையில் சொல்லலாம்?

இன்றைய தேதியில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளில் உள்ளவர்களின் எண்ண ஓட்டங்களில் ஓடிக் கொண்டிருப்பதெல்லாம் வாக்காளர்களை எப்படியெல்லாம் தங்களின் தேர்தல் அறிக்கையின் மூலம் கவரலாம் என்பதுதான்.

சென்ற சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி அறிவிப்பு தான் திமுகவுக்கு கடைசி நேரத்தில் வெற்றி அளித்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே அடுத்து வரும் தேர்தலில் என்ன வாக்குறுதியைக் கொடுத்து வாக்காளர்களை கவருவது என்று அனைத்து கட்சியினரும் முடியைப் பிய்த்துக் கொண்டுள்ளனர்.

ஏதோ நம்மால் முடிந்தது அவர்களுக்கு சில யோசனைகளை சொல்லி வைப்போமே? உதாரணமாக கீழ்க்கண்ட வாக்குறுதிகளை அவர்கள் அளிக்கலாம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்....

-வீட்டிற்கு இரு கைப்பேசிகள்
-வீட்டிற்கு ஒரு இண்டக்சன் அடுப்பு (அதுதாங்க கரண்ட் அடுப்பு)
(கரண்டே இல்லையென்றால் அதற்கு நான் பொறுப்பல்ல)
-வீட்டிற்கு ஒரு இன்வர்ட்டர் (கரண்ட் இல்லை என்று யாரும் சொல்லமுடியாது)
-வீட்டிற்கு ஒரு தையல் மிஷின்
-வீட்டிற்கு ஒரு கணிப்பொறி/மடிக்கணினி
-வீட்டிற்கு ஒரு இரு சக்கர வாகனம்

இவை கொடுத்தாலும் ஓட்டு கிடைக்குமா என்று சந்தேகமிருந்தால் இதனை வாக்குறுதியாக கொடுக்கலாம்.

-வீட்டிற்கு ஒரு நானோ கார்.

உங்களுக்கும் ஏதாவது யோசனை தோன்றினால் சொல்லுங்களேன், தமிழக அரசியல் கட்சிகளுக்கு உபயோகமாக இருக்கும்.

தமிழக மீனவர்களின் ஒரே எதிரியும், பல துரோகிகளும்

தமிழக மீனவர்களின் ஒரே எதிரி யார் என்றால் பச்சை குழந்தை கூட பளிச் சென்று சொல்லிவிடும் சிங்கள ராணுவ வீரர்கள் என்று. ஆனால் மீனவர்களுக்கு எதிரான துரோகிகளுக்கோ பஞ்சமில்லை. அவர்கள் எல்லாம் இன்றைக்கு தமிழகத்திலேயே பல்வேறு அரசியல்கட்சிகளாக பிரிந்திருந்தாலும், மீனவர்களுக்கு (மனப்பூர்வமாக) உதவுவதில் மட்டும் அவர்கள் ஒருவருக்கு மற்றவர் சலைத்தவர்களில்லை.

இனிமேல் ஒரு மீனவன் சுடப்பட்டு செத்தால் கூட திமுக தன்னுடைய மத்திய அமைச்சர்களை வாபஸ் வாங்கிக் கொள்ளும், அதிமுக தன்னுடைய அனைத்து எம்.பிக்களையும் வாபஸ் பெற்றுவிடும், மத்திய காங்கிரஸ் அமைச்சர்களான ப.சிதம்பரமும், ஜி.கே. வாசனும் பதவி விலகிவிடுவார்கள், ஐயா ராமதாஸ் தனது மகன் அன்புமணி ராஜ்யசபா தேர்தலில் நிற்கவே மாட்டார் என்று அறிவித்து விடுவார், ஈவிகேஎஸ் இளங்கோவனும், சுப்ரமணியன் சுவாமியும் இனிமேல் பத்திரிகைக்கு பேட்டியே கொடுக்கமாட்டோம் என்று அறிவித்துவிடுவார்கள்.

ஆகவே யாராவது போய் ராஜபக்சேவிடம் சொல்லுங்கள் மேலே சொன்னவையெல்லாம் நடக்காமல் இருக்கவேண்டுமென்றால் தமிழக மீனவனைச் சுடுவதை உடனே நிறுத்துங்கள் என்று!