Saturday, August 20, 2011

ரூபாய் குறியீட்டுடன் புதிய இரண்டு ரூபாய் நாணயம்: குழப்பமே மிச்சம்

இந்திய ரூபாய் குறியீட்டுடன் வெளியாகியுள்ள இரண்டு ரூபாய் நாணயம், ஒரு ரூபாய் நாணயத்தைப் போலவே இருப்பதால், பெரும் குழப்பமே மிச்சமாகியுள்ளது.

இந்திய ரூபாய்க்கான புதிய குறியீட்டுடன் வெளியாகியுள்ள இரண்டு ரூபாய் நாணயத்தின் முன்பக்கம் சிங்கமுகம் உள்ளது. பின்பக்கம் புதிய குறியீட்டுடன் எண்ணால் 2 என அச்சடிக்கப்பட்டுள்ளது. இரண்டு ரூபாய் நாணயத்தின் முன்பக்கமும், ஒரு ரூபாய் நாணயத்தின் முன்பக்கமும் ஒரே மாதிரியாக உள்ளது. பழைய ஒரு ரூபாய் மற்றும் இந்த புதிய இரண்டு ரூபாய் நாணயத்தின் வடிவ அளவு மற்றும் எடை ஒரு மாதிரி இருப்பதால் பொருட்கள் வாங்கும் போதும், சில்லரை மாற்றும் போதும், பலர் இரண்டு ரூபாயை, ஒரு ரூபாய் என நினைத்து ஏமாற்றமடைந்து வருகின்றனர்.

சராசரி மனிதர்களே புதிய இரண்டு ரூபாய் நாணயத்தை கையாள்வதில் ஏமாற்றமடைந்து வரும் நிலையில், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் இந்த நாணயத்தை கையாள்வதில், பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

பார்த்தவுடன் சாதாரண மனிதனுக்குக் கூட புரியக்கூடிய இந்த குறைபாடு, இந்த நாணயத்திற்கு அங்கீகாரம் கொடுத்த அதிபுத்திசாலிகளுக்கு ஏன் விளங்கவில்லையோ? ஒரு வேளை இந்த நாணயத்திற்கு அனுமதி கொடுக்கும் நிலையில் இருந்த அனைவரும், ரோபோட்கள் போல் அபார அறிவு படைத்தவர்களோ என்னவோ. உண்மையில் ரோபோட்டுகள் கூட அவற்றை அடையாளம் காட்டும் போது அதிக முறை தவறே செய்யும்.

இந்த நாணயத்திற்கு அனுமதி கொடுத்ததின் மூலம் அதிகாரிகள் ஒன்றை விளங்க வைத்துவிட்டார்கள். அதாவது அரசு வேலையில் சேர்ந்ததும், மூளைக்கு ஓய்வு கொடுத்து விடும் பெருவாரியான அதிகாரிகளின் ஒரு அங்கம் தான் தாங்களும் என்று நிரூபித்து விட்டார்கள்.

ஆனால் ஒன்றை மட்டும் நாம் பாராட்ட வேண்டும். உண்மையாக உழைக்கக் கூடிய சிறு எண்ணிக்கையிலான அரசு அதிகாரிகளை வைத்துக் கொண்டே, இந்த நாட்டு நடப்பு ஓடிக் கொண்டுதானே இருக்கிறது.

அதிகாரிகளையும் சொல்லி குற்றமில்லை, அவர்களில் பெரும்போலோர் அரசியல்வாதிகளுக்கு 'ஆமாம் சாமி' போடும் ஆட்டு மந்தைகளாகத்தானே இருக்கிறார்கள். அமைச்சர் 'காக்கா கருப்பு' என்றால் இவர்களும் 'கருப்பு' என்பார்கள், 'வெள்ளை' என்றால் 'வெள்ளை' என்பார்கள்.

அப்படி சொல்லமல் ஒரு அதிகாரியாவது துணிந்து அமைச்சரிடமோ, அல்லது உயர் அதிகாரியிடமோ உண்மையைச் சொல்லியிருந்தால் இந்த நாணயம் வெளிவந்திருக்குமா?

வாழ்க நிதியமைச்சர்! வாழ்க நிதித்துறை அதிகாரிகள்! வாழ்க ரிசர்வ் வங்கி!