Tuesday, April 12, 2011

ஆனந்த விகடனில் வெளியான எனது சிறுகதை

நிஜமாகா நிழல்கள்

'தம்பா'

(ஆனந்த விகடன் - 30-06-2002 - பக்கம் 88-93)

முன்குறிப்பு : இந்தக் கதையில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. இது எச்சரிக்கை அல்ல. உண்மையில் நடக்காதா என்ற ஏக்கம், எதிர்பார்ப்பு...

நடந்து முடிந்த தேர்தலில் என்னுடைய கட்சி, ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. சென்ற முறை மந்திரி பதவியில் இருந்தவர்களில் ஊழல் வழக்குகளில் சிக்காமல் நல்ல மந்திரியெனப் பெயரெடுத்தவர்களில் நானும் ஒருவன். ஆகவே இந்த முறையும் எனக்கு மந்திரி பதவி நிச்சயம். சென்ற முறை வகித்த கதர்த்துறையைக் காட்டிலும் நல்லதுறை கண்டிப்பாகக் கிடைக்கும் என நினைக்கிறேன். தேர்தல் முடிவு தெரிந்ததும் தலைவரைப் பார்த்து ஆசி பெற்றேன். பதிலுக்குப் புன்னகையை மட்டும் சிந்திய தலைவர், வேறு எதுவும் பேசவில்லை. நாளை மறுநாள் மந்திரிசபை பதவியேற்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மந்திரிகள் பட்டியல் பதவியேற்பு விழாவுக்கு சற்று முன்தான் தெரியும் என நினைக்கிறேன். இலாக்காக்கள் அன்று மாலைதான் முடிவாகும். இரண்டு நாளில் நான் மந்திரியாகிவிடுவேன். அந்த இரண்டு நாள் போவதுதான் இரண்டு யுகம் போவது போல் இருக்கும். சுகமான எதிர்பார்ப்பு.

நான் எதிர்பார்த்த அழைப்பு வந்துவிட்டது. தலைவரே போன் மூலம் அழைப்புவிடுத்ததை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மளமளவென்று விழா முடிந்தது. கவர்னருடன் போட்டோ எடுத்துக் கொண்டதும் அனைவரும் கிளம்பினோம். நான் சற்றும் எதிர்பாராத வருவாய்த் துறையை ஒதுக்கியிருந்தார் தலைவர். மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மாலையே இலாகா பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். பின்னர் தலைவரை அவரது வீட்டில் சென்று சந்தித்தேன். என்னைப் பார்த்ததும் அமரச் சொல்லி காபி சாப்பிடச் சொன்னார். பின்னர் நேரடியாக விஷயத்துக்கு வந்தார். “உங்களுக்கு வருவாய்த்துறையை ஒதுக்கியதற்குக் காரணமே நீங்கள் ஊழல் எதிலும் சிக்காததுதான். அதேபோல, இந்த முறையும் பார்த்துக் கொள்ளுங்கள். சென்ற முறை நீங்கள் அதிகம் பேருக்குப் பல துறைகளில் சிபாரிசு செய்ததாகக் கேள்விப் பட்டேன் - முக்கியமாக உங்கள் சாதியினருக்கு. இந்த முறை அதைக் கட்டுபடுத்தினால் நன்றாக இருக்கும். தொடர்நது நல்ல முறையில் செயல்பட என் வாழ்த்துக்கள்.” சுருக்கமாக ஆனால், சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.

காரில் வரும்போது அவர் சொன்னதை யோசித்துப் பார்த்தேன். நூற்றுக்கு நூறு சரி. சென்ற முறை நான் என் சாதியினரிடத்தில் சற்று தாராளமாகத்தான் இருந்துவிட்டேன். அமைச்சர் என்பவர் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் என்பதை ஏனோ அப்போது உணரவில்லை. ஆனால் அப்போது எனக்கு மந்திரி பதவியே அந்த சாதி அடிப்படையில்தானே வந்தது. அதனால்தான் அவ்வாறு நடந்து கொண்டேன். நான் செய்தது சரியா... தவறா? தெரியவில்லை! எது எப்படியிருப்பினும், இந்த முறை என் தகுதியின் அடிப்படையில்தான் மந்திரி பதவி கிடைத்துள்ளது. ஆகவே தலைவர் சொன்னபடி ஊழல் எதுவும் செய்யாமல், சாதி மதத்துக்கு அப்பாற்பட்டு யாருக்காகவும் எதற்காகவும் சிபாரிசு எதுவும் செய்யாமல் தூய்மையாக நடந்து கொள்ளவேண்டும். இதை எந்தச் சூழ்நிலையிலும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று நானே உறுதிசெய்து கொண்டேன்.

சாமர்த்தியமாக ஊழல் செய்வது, பலருக்கும் சிபாரிசு செய்வது, கட்சிக்காரர்கள் மற்றும் சாதிக்காரர்களை மகிழிவிக்கும் செயல்களைச் செய்வது - இந்த மூன்றையும் செய்வதைவிட செய்யாமல் இருப்பது எவ்வளவு கடினம் என்பதைப் பதவியேற்ற மூன்று மாதங்களிலேயே தெரிந்துகொண்டேன். கடந்த மூன்று மாதங்களாக இந்த மூன்றையும் செய்யாமல் நான் மிகவும் கண்டிப்புடன் நடந்துகொண்டதால், சக அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், கட்சிக்காரர்கள், சாதிக்காரர்கள் என அனைவரின் வெறுப்பையும் ஒருசேர சம்பாதித்துவிட்டேன். இருந்தாலும் என் கொள்கையில் விடாப்பிடியாக தொடர்ந்து இருப்பது என்று முடிவுடன் செயல்பட்டேன்.

மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்தபோது வயதான முதியவர் ஒருவரும் இளைஞனும் நின்றிருந்தார்கள். பார்த்தவுடன் தெரிந்தது - சிபாரிசுக்காக வந்திருக்கிறார்கள். முதியவரை எங்கோ பார்த்த நினைவு. அவர்களைக் காக்க வைக்க விரும்பாமல் உடனே உள்ளே வரச் சொன்னேன். வந்தார்கள். இருக்கையைக் காட்டி அமரச் சொன்னேன். சற்றே மரியாதையுடன் அமர்ந்தார்கள். “என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள்? உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே?” என்றேன். முதியவர் பதில் சொன்னார். “சார், நான் முதுகுளத்தூரில் அரசு மேல் நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவன். பெயர் காத்தமுத்து. இது என் மகன் இளஞ்செழியன். எம்.ஏ., எம்.·பில். படித்திருக்கிறான். கல்லூரி ஆசிரியர் தேர்வு எழுதி நேர்முகத்தேர்வுக்கு தேர்வாகியுள்ளான். நீங்கள் மனது வைத்தால்...”

இப்போது எனக்கு நினைவுக்கு வந்தது. அவர் எனக்குப் பாடம் சொல்லித்தந்தவர். அதைச் சொன்னால் தப்பாகிவிடுமோ என்று சுற்றிவளைத்துச் சொல்கிறார். “நல்லா இருக்கீங்களா ஐயா! பார்த்து ரொம்ப நாள் ஆச்சா.. அதான் அடையாளம் தெரியலை. அதுவும் நீங்க ரொம்ப மெலிஞ்சு போயிட்டீங்க வேற. நீங்க கத்துக்குடுத்த தமிழும் மேடைப்பேச்சுத்திறனும்தான்யா என்னை இங்க உக்காத்தி வெச்சிருக்கு.”

“ஐயா... அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. உங்க உழைப்பும் நேர்மையும்தான்யா உங்களை உயர்த்தியிருக்கு.”

அவர் பையனிடமிருந்து சர்டிபிகேட்டுகளை வாங்கிப் பார்த்தேன். அவர் சொன்னது நிஜம். பையன் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தான். எம்.·பில். படிப்பல், சங்க இலக்கியத்தில் ஒப்பாய்வு செய்திருந்தான். இப்படிப்பட்டவனுக்கு கண்டிப்பாக வேலை கொடுக்கலாம்.

ஆனால், நான் திரிசங்கு சொர்க்கத்தில் மாட்டிக் கொண்டேன். சிபாரிசு செய்யாவிட்டால் ஐயா மனசு சங்கடப்படும். பன்னிரண்டு ஆண்டு காலம் என் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டவர். அதை எண்ணும்போது இது மிகச் சிறிய உதவிதான். ஆனால், இதைச் செய்தால் நான் மூன்று மாதங்களாக மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் வீணாய்ப் போய்விடும். என் மனசாட்சியே என்னை உறுத்தும். முடிவாக அவர்களை நோக்கி, “ஐயா... எப்ப ஊருக்குப் போறீங்க?”

“வேலை முடிஞ்சா இன்னிக்கே போயிடுவேங்க.”

“இல்ல... இது கல்வி இலாகா சம்பந்தப்பட்ட விஷயம். எதுக்கும் அந்த மந்திரியைப் பார்த்துப் பேசிட்டுச் சொல்றேனே.”

அவர் மெளனம் காத்தார்.

“நீங்க ஒண்ணு பண்ணுங்க. நாளைக்கு காலையிலே தம்பி மட்டும் கோட்டைக்கு வந்து என்னைப் பார்க்கட்டும். ஐயா... நீங்க வந்து கஷ்டப்படவேண்டாம். என்னால முடிஞ்சதை கண்டிப்பா செய்யறேன்.” எழுந்து விடை கொடுத்தேன்.

எப்படியோ பிரச்சனையை ஒரு நாள் தள்ளிப்போட்டுவிட்டேன். நாளைக்கு காலையில் இளைஞனிடம் என்ன சொல்வது? தெரியவில்லை.

சொன்னபடி இளைஞன் பத்து மணிக்குக் கோட்டைக்கு வந்துவிட்டான். உள்ளே வரச்சொல்லி அமரச் சொன்னேன். அமர்ந்ததும் நான் பேச்சை ஆரம்பிக்கும் முன் அவனாக ஒரு லெட்டரை என்னிடம் கொடுத்தான்.

“என்ன இது?”

“சார், எனக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு சின்ன உதவியை நீங்கள் செய்யவேண்டும். இது மிகவும் ரகசியமாக இருக்கவேண்டும். எங்கப்பாவுக்குக்கூடத் தெரியக்கூடாது. தயவுசெய்து நான் போன பிறகு இதைப் படியுங்கள். மீண்டும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.. தயவுசெய்து இதை எனக்காகச் செய்யவும் - ரகசியமாக.”

எனக்கு எரிச்சலாக இருந்தது. நேற்று கேட்டதற்கே பதில் சொல்லமுடியவில்லை. புதிதாக இது வேறு. ஆனால், அவன் முகத்தைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது. கவரை வாங்கிக் கொண்டேன். என்ன உதவி கேட்டிருப்பான், அதுவும் ரகசியமாக அப்பாவுக்குக் கூட தெரியாமல். எது எப்படி இருந்தாலும் நேற்று என் ஆசிரியர் கேட்ட உதவிக்கு முதலில் என் முடிவைச் சொல்லிவிடவேண்டும்.

“தம்பி... நான் சொல்வதைக் கொஞ்சம் கவனமாகக் கேளுங்க. நான் உங்கப்பாவுக்குப் பல வகையிலும் கடமைப்பட்டவன். அவர் கேட்ட உதவியும் என்னால் செய்யக்கூடியதுதான். உங்களுக்கும் அந்த வேலைக்கான எல்லா தகுதியும் இருக்கிறது. ஆனால், நான் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் முன்ன மாதிரி இல்ல தம்பி. இந்தத் தடவை வந்ததிலிருந்து நான் அஞ்சு பைசாகூட வாங்கறதில்லே. அதே மாதிரி யாருக்கும் சிபாரிசும் செய்யறதில்லே. ஏதோ கடைசி காலத்தில் மக்களுக்கு உண்மையா உழைக்கலாம்னு இருக்கேன். உங்களுக்கு உதவமுடியலையேன்னு எனக்கு வருத்தம்தான் தம்பி. இதை நேத்தே சொல்லியிருப்பேன். ஐயாகிட்டே இதை என்னாலே சொல்ல முடியலை தம்பி. அவரால தாங்க முடியாது. அவரு எங்கிட்ட உதவி கேட்டு வர்றதுக்கே எவ்வளவு யோசிச்சிருப்பாருன்னு எனக்குத் தெரியும். அதான் சொல்லலை. நீங்க அப்படியில்லை. படிச்சவர். இளைஞர். என் நிலைமையைப் புரிஞ்சுக்குவீங்கன்னு நினைக்கிறேன். உங்களைப் பார்த்தா நல்ல விடாமுயற்சியுடையவர்னு தெரியுது. தொடர்ந்து முயற்சி செய்யுங்க. கண்டிப்பா உங்களுக்கு என் உதவியில்லாமலே வேலை கிடைக்கும். என்னால முடிஞ்சது, உங்களுக்காக கடவுள்கிட்ட வேண்டிக்கிறதுதான். தயவுசெய்து நான் இப்படிச் சொன்னேன்னு நீங்களும் யார்கிட்டேயும், முக்கியமா ஐயாகிட்டே இப்ப சொல்லாதீங்க. கடவுள் கருணையால உங்களுக்கு இந்த வேலையே என் சிபாரிசு இல்லாமலே கிடைச்சுட்டா அப்புறம் வேணும்னா சொல்லுங்க. வேலை கிடைக்க என் வாழ்த்துக்கள்.”

இளைஞன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. வணக்கம் சொல்லிவிட்டுப் போகத் திரும்பினான். “தம்பி, இந்தாங்க, நீங்க கொடுத்த லெட்டர். இதுல நீங்க எதைக் கேட்டிருந்தாலும் என்னால செய்யமுடியாது. மன்னிச்சுடுங்க” லெட்டரை நீட்டினேன். அவன் வாங்கவில்லை. தயங்கித் தயங்கிச் சொன்னான். “சார், எங்க அப்பா கேட்டதை செய்யமுடியாவிட்டாலும் நான் கேட்டதை கண்டிப்பா உங்களால செய்ய முடியும். தயவுசெய்து நான் போன பிறகு படிச்சுப் பாருங்க. நான் சொல்றது எவ்வளவு உண்மைனு உங்களுக்கே புரியும்.” போய்விட்டான்.

அந்த இளைஞன் கொடுத்த கடித கவரைக் கிழித்து உள்ளே எழுதியிருந்ததைப் படித்துப் பார்த்தேன். ஒரு முறையல்ல... பல முறை. ஆம்... அந்த இளைஞன் சொன்னது சரிதான். என்னால் அவன் கேட்டுள்ளதை கண்டிப்பாகச் செய்ய முடியும். அதைச் செய்வதில் எனக்கு சங்கடம் இல்லை. பெருமைதான்! கடிதத்தைப் படித்தால் உங்களுக்கே புரியும்.

‘ஐயா,
எங்கள் குடும்ப வறுமை காரணமாக என் தந்தை உங்களை வந்து சந்தித்து சிபாரிசு கேட்க வேண்டியதாகிவிட்டது. எனக்கு வேலை கிடைக்கும் என பொறுத்துப் பொறுத்து வெறுத்துப் போய்த்தான் கடைசியில் உங்களிடம் சிபாரிசுக்காக வந்தார். அவருக்கு என் திறமை பேரில் நம்பிக்கை போய்விட்டது. சிபாரிசு இல்லாமல் எனக்கு வேலை கிடைக்காது என்று முடிவு கட்டிவிட்டார். ஆனால், எனக்கு இன்னமும் என் படிப்பு மீதும் என் திறமை மீதும் நம்பிக்கை இருக்கிறது. யாருடைய சிபாரிசும் இல்லாமலேயே எனக்கு வேலை கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். அந்த வேலை இப்போது கிடைக்காவிட்டாலும் கண்டிப்பாக கூடிய விடைவில் கிடைக்கும் . அதுவரையில் நம்பிக்கை இழக்காமல் வேறு வேலை செய்ய முடிவு செய்துவிட்டேன். அப்பா மனது நோகக்கூடாதே என்றுதான் நேற்று இதுபற்றி எதுவும் பேசவில்லை. தயவுசெய்து இந்த வேலைக்காக எனக்கு எந்த சிபாரிசும் செய்ய வேண்டாம். உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கியதற்கு என்னை மன்னிக்கவும்.

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
இளஞ்செழியன்.’